இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் பெரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என இரு படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு ‘மாமன்னன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும், வடிவேலு மற்றும் பஹத் பாசில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இன்று இயக்குனர் மாரி செல்வராஜின் பிறந்தநாள். அதையடுத்து மாமன்னன் படக்குழுவினர் மாரி செல்வராஜுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர்.அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மாமன்னன் படம் தான் உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து முழுக்க அரசியலில் கவனம் செலுத்த உள்ளாராம். கடைசி படம் என்பதால் இந்த படத்தில் இடம் பெறும் அனைவரும் முக்கியமனவர்களாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளனராம்.